Thursday, November 28, 2013

சனி பகவான் கவசம்


காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
கருநிற காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே உந்தன்
அருள் கேட்டுவணங்குகிறேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்!
ஏழரை சனியாய் வந்தும்
வீட்டில் இடம் பிடித்தும்
கோளாறு நான்கில் தந்தும்
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலத்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்!
பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணையில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத் துதித்தேன்!
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே!
கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி தருவாய்!
பெரும் பொருள் தரும் ஈசா
பேரருள் தருக நீயே
சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம், பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி
இனிதே உன் விண் மீனாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்
குளிகனை மகனாய் பெற்றாய்
குறைகளை அகல வைப்பாய்
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர் அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்!
அன்னதானத்தின் மீது
அளவில்லா பிரியம் வைத்த
மன்னனே! சனியே ! உன்னை
மனதார போற்றுகின்றோம்
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத் தந்தே
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்
மந்தானம் காரி நீலா
மணியான மகர வாசா
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று!

Tuesday, November 26, 2013

பயமுறுத்துகிறதா பருமன்?

பயமுறுத்துகிறதா பருமன்?
கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

Saturday, November 23, 2013

தூக்கம் ஒரு மாமருந்து

தூக்கம் ஒரு மாமருந்து
நித்திய நியமங்களில் நித்திரைக்கு நிரந்தர இடம் உண்டு. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரமும் 6 வயது வரை 15 மணி நேரமும் சிறுவர்கள் 12 மணி நேரமும் பெரியவர்கள் 8 மணி நேரமும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 மணி நேரமும் உறங்கினால் நமது உயிர் பேட்டரி சார்ஜ் ஆகி ஆரோக்கியம் அழிவு படாமல் உயர்த்திடப்படும்.
மன சஞ்சலம் தீர்க்கும் மருந்து உறக்கம்,கவலைகளைக் கரைக்கும் மருந்து உறக்கம்,உடல் பிணிகளைப் போக்கும் மருந்து உறக்கம்,தினம் புத்துணர்ச்சியைத் தரும் மருந்து உறக்கம்,ஆழ்மனதை சுத்தரிக்கும் மருந்து உறக்கம்,உறக்கம் இல்லையேல் நரம்பு தளர்வு ஏற்படும்
இன் சோம்னியா நோய் ஏற்படும்.அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படாது.கழிவு மண்டல நச்சுக்கள் உடலில் தேங்கும்.மனம் தறி கெட்டு பாயும்.
சுவாசக் காற்று, நீர், வெப்பத் தேவை போல் உறக்கம் அத்தியாவசியக் கலை. அதை அருமையாக அனுபவிப்பவர்கள் மிகக் குறைவு.பகலில் தூங்கியே இரவுத் தூக்கத்தைத் தொலைத்து தொல்லைகளுக்கு ஆளாகுபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். தூக்க மாத்திரையின் துணையுடன் ஒப்புக்குத் தூங்குபவர் நம்மில் பலர் உள்ளனர்.பகல் தூக்கம் பட்டுத் தூக்கம்
இரவு தூக்கம் இன்பத் தூக்கம்.நாம் படுக்கைக்கு சென்றவுடன் தூங்கும் தன்மையைப் பெற்றால் அதுவே வாழ்வின் மிகப் பெரிய அரிய பொக்கிஷமாகும். அதுவே மன நிம்மதிக்கு அத்தாட்சி, சான்றாகும்.
இரவுத் தூக்கத்தில் ஜீரண மண்டலம் தவிர மற்ற தசைநார்கள் இயக்கங்கள் முழு ஓய்வு எடுத்து அழிந்த திசுக்கள் புத்துப்பித்தல் பராமரித்தல் நடைபெறுகிறது. உடலில் தேங்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக நரம்பு சோர்வு நரம்பு தளர்ச்சி சரி செய்யப்படுகிறது.
'நினைந்து நினைந்து உணர்ந்த உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்த அன்பே&
தவம் புரியேன் தவம் புரிந்தார் தமைப் போல நடித்தேன்
தருக்குகின்றே னுணர்ச்சியிலாச் சடம் போல விருந்தேன்.
சுகமன நித்திரை கிடைக்க சில,
1. இரவல் தூக்கமாத்திரை, போதை வஸ்துகள் சாப்பிடக்கூடாது
2. இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்கு முடித்தல்.
3. கனி உணவாக சாப்பிடுதல் நல்லது.
4. உணவு முடித்து ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுதல். (அரை மணி நேரம் குறுநடை செல்லலாம்.)
5. சளி, இருமல், சுவாசப்பிணிகள் இருப்பவர்கள் பால், தயிர் முட்டை உணவை இரவில் நிறுத்த வேண்டும். தூங்கும் குழந்தைகளை எழுப்பி பால் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
6. இரவில் படுக்கும் முன் சூடான காபி, டீ, பிற இதர குளிர்பானங்கள் தவிர்க்கப்படவேண்டும்-.
7. படுக்கும் முன் தியானம் செய்யலாம்.
8. அலுவலக வேலை, தீர்வு கிட்டாத வேலைகளை இரவில் செய்யக்கூடாது.
9. படுக்கும் முன் அரை டம்ளர் அளவு நீர் பருகலாம்.
10. கடவுள் சிந்தனை, மந்திரம் உச்சரிக்கலாம்.
11. மனதுக்கு பிடித்த இசை நல்லது.
12. பல நேரம் தேவையற்ற இரைச்சல், ஓசை, எரிச்சல் தரும் சினிமாப் பாடல்கள் நல்ல தூக்கத்தில் முதல் தர எரிரியாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
13. தினசரிக் கவலைகளை இரவு 8 மணிக்குள் வெளியேற்றிவிட வேண்டும். கரைத்து விட வேண்டும். தொலைத்து விட வேண்டும். வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை படுக்கைக்கு அழைத்துச் செல்லக்கூடாது.

Monday, November 18, 2013

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

மூளையைத் தூங்க விடாதீர்கள்!
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

கற்ப மூலிகை ஆடாதோடை/ஆடாதோடா/Adhatoda zeylanica

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும். இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. .
நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.
நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும். ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.
அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.
அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.
ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.
குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.
அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.
ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்..!


1 - மணத்தக்காளி கீரை
இக் கீரை அதிக மருத்துவ குணம் கொண்டது.மணத்தக்காளிக்குத் தனியாக விதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கடைகளில் கிடைக்கும் மணத்தக்காளி வற்றலில் இருந்து விதைகளை உதிர்த்து எடுக்கலாம். கீரையில் இருக்கும் பழங்களை
தண்ணீரில் பிசைந்து விதைகளை பிரித்தெடுத்து காய வைத்தும் சேகரிக்கலாம்.
நன்றாக வெயில் படும் இடத்தில் இக்கீரையை வளர்க்க வேண்டும். இதை வளர்க்க செம்மண்ணும், மணலும் கலந்து, கொஞ்சம் சாண உரமும் கலந்து மண் தொட்டிகளிலோ, தகர டப்பாக்களிலோ, பிளாஸ்டிக் வாளிகளிலோ விதைகளை தூவி வளர்க்கலாம். வளர்ந்ததும் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
மருத்துவகுணம்:
இக்கீரையானது வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுப்புண்ணுக்கும் சிறந்த மருந்தாகும். மேலும் சளி, ஆஸ்துமா போன்ற தொல்லைகளையும் நீக்கும். அதனால் வாரத்தில் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதன் பழங்களை அப்படியேயும் சாப்பிடலாம். மிகவும் நல்லது.
நல்லவை உண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் !

துளசி


எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

தூதுவளை (Solanum trilobatum)


பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.
சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.
நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்
தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும். { ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் } தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.
ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம். இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.
தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..


முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள். { ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.
வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்.

திருமூலர் காட்டும் இலிங்கங்கள்.!

இலிங்கம் என்பதற்கு பலரும் பல பொருள்களைக் கூறுகின்றனர். அவற்றுள் முக்கியமாக கீழ்காணும் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.

1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். எந்த இடத்தில் பிரளய காலத்தில் சேதன, அசேதனப் பிரபஞ்சங்கள் அனைத்தும் லயம் அடைந்து பின்னர்ப் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.

2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும் என்றும் சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

3. இலிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பை உணர்த்தும் அடையாளத்தை அல்லது குறியை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம்.

திரூமூலர் கூறும் இலிங்க வகைகள்

1. அண்ட இலிங்கம்
2. பிண்ட இலிங்கம்
3. சதாசிவ இலிங்கம்
4. ஆத்ம இலிங்கம்
5. ஞான இலிங்கம்
6. சிவ இலிங்கம்

1. அண்ட இலிங்கம்

அண்டம் என்றால் உலகம். இலிங்கம் என்பது குறி. அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் தோற்றுவித்தான். குண்டலி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713)

இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724)

நிலம் - ஆவுடையார், ஆகாயம் - இலிங்கம், கடல் - திருமஞ்சனமாலை, மேகம் - கங்கை நீர், நட்சத்திரங்கள் - ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை - எட்டு திசைகள் என்று இலிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம் (திருமந்திரம் 1725)

2. பிண்ட இலிங்கம்

மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து (திருமந்திரம் 1726)

என்று திருமூலர் கூறுகின்றார்.

மக்கள் தலை - பாணம்
இடைப்பட்ட உடல் - சக்தி பீடம்
கால் முதல் அரை வரை - பிரமபீடம்

எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

3. சதாசிவ இலிங்கம்

இலிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு

இருதயம் - ஞானசக்தி
தலை - பராசக்தி
தலைமுடி - ஆதிசக்தி
கவசம் - இச்சா சக்தி
நேத்திரம் - கிரியா சக்தி

சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ இலிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.

4. ஆத்ம இலிங்கம்

அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம இலிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கும் நிலை. நாதமும் விந்துவும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

திருமூலர் முதலிய தவயோகியர் சிவலிங்க வடிவங்களைப் பீடமும் இலிங்கமுமாக வைத்து பீடத்தை விந்து வடிவம் எனவும் இலிங்கத்தை நாத வடிவம் எனவும் உணர்த்தியுள்ளனர்.

நாதம் என்பது முதல்வனது ஞானசக்தி நோக்கத்தினால் சுத்த மாயையில் நேர்க்கோட்டு வடிவில் மேலும் கீழுமாக எழும் ஒரு அசைவைக் குறிக்கும். இவ்விரண்டு அசைவும் முறையே முதல்வனது ஞானசக்தியினாலும், கிரியா சக்தியினாலும் விளைவனவாகச் சிவசக்திகளது சேர்க்கையை உணர்த்தும் என பெரியோர்கள் கருதுகின்றனர். இவ்விரு அலைகளும் இணைந்தும், பிணைந்தும், மாறுபட்டும் உலகப் பொருட்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், தேய்ந்து மாய்தலையும் உண்டாக்குகின்றன என்கின்றனர்.

5. ஞான இலிங்கம்

உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770)

என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.

6. சிவலிங்கம்

அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு குறியின் இடமாக எழுந்தருளச் செய்தும் வணங்கும் முறையை உணர்த்துகிறது.

அடையாளமும், உருவமும் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைக்கவோ வழிபடவோ முடியாது. பக்குவமில்லாத உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய முதனையாக இறைவனை உணர்த்தும் ஒரு அடையாளம் தேவையாக இருக்கிறது.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அக்குறியினிடத்திலும் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே (திருமந்திரம் 1773)

என்று கூறுவதை நினைவில் கொண்டு இறைவனை இலிங்க வடிவில் நற்பேறுகளைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்வோம்.

நீரிழிவு நோய் நீக்கும் ஆவாரம் பூ..!


ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும்.
ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.
ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.

திரிகடு சூர்ணம்-Trikatu choornam


( ref-பாவப்ரகாச நிகண்டு – மத்யம கண்டம்)
தேவையான மருந்துகள்:
1. சுக்கு – சுந்டீ - 10 கிராம்
2. மிளகு – மரீச்ச - 10 “
3. திப்பிலி – பிப்பலீ - 10 “
குறிப்பு -சுக்குக்கு புற நஞ்சு எனவே -சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
செய்முறை:
இவைகளை முறைப்படி பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.
அனுபானம்:
தேன், நெய், தண்ணீர்.
தீரும் நோய்கள்:
விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவிதகாய்ச்சல்கள் (ஜ்வர), வயிற்று உப்புசம் (ஆத்மான), உணவில் விருப்பமின்மை (அரோசக), பசியின்மை (அக்னி மாந்த்ய), பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள் (ஆமதோஷ), கழுத்தில் தோன்றும் நோய்கள் (காலரோக), பீனிசம் (பீனஸ), தோல் நோய்கள் (குஷ்ட), இருமல், ஜலதோஷத்துக்கு சர்க்கரை மற்றும் தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை -
திரிகடு என்ற இந்த திரிகடுகு -பல மருந்துக்கு துணை மருந்தாக -அனுபானமாக உபயோகப்பதுண்டு
திரிகடுகு -சிறந்த கார்ப்புள்ளது -நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி , ஜலதோஷத்தை நீக்கும் ..நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை போக்கும்
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும் ,புதுப்பிக்கும் ,கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும்
இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும் ,பெண்களின் கரு முட்டை வெடித்தல் குறைபாடு உள்ளவர்களுக்கு பட்டு கருப்புடன் கொடுத்தல் சிறந்தது ,ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் -திரிகடு சார்ந்த ஷட்தர்ணம் சூரணத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.
மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள்,அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள் ,Thyroid குறைவாக சுரக்கும் நோயாளிகள் ,உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள் ,மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து -தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்
செரிமான சுரப்பி ,வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் -எப்படி இருந்தாலும் சரி செய்து -ந்யூற்றிசன் என்ற சக்தி குறைபாடில்லாமல் ,எல்லா குடல் உறிஞ்சுகளையும் வேலை செய்யவைத்து ,உடல் சக்திகளை வேலை செய்யவைக்கும் .
வலிகளை போக்கும் மருந்துகளில் -இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்
பல பற்ப ,செந்தூரங்களை கொடுக்கும் போது -த்ரிகடுவை மூல மருந்து சூரணமாக பயன் படுத்தலாம்.ஆனால் பொடிவடிவில் கிடைக்கும் சூரணமே சிறந்த பலன் அளிக்கும்
திரிகடுகு சேராத ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தே இல்லை எனலாம்.

Friday, November 15, 2013

அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி




அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள். 

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் சமிபாடடையும். பித்த தொடர்பான நோய்கள் நீங்கும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடடால் தேகத்தில் சூடு தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும், சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப்புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்.

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம். அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்திக் கீரைச் சாற்றை சேற்றுப் புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்திக் கீரையின் இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்துப் பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்திக் கீரையைச் சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம். அகத்தி கீரையைக் ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்திக் கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு. எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகைப் படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

அகத்திக் கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே" என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

அகத்தியை போற்றும் சித்தர் பாடல்:

”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."

அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதில் வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு நல்லாகவே வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாமல் முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே முடியாமலிருக்கும்..

இந்தமாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குகின்ற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ‌ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு மகத்துவம் உள்ளது.

அரைக்கீரையை தினமும் சோற்றுடன்/ சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

குழந்தை பெற்ற பெண்கள் உடலில் போதுமான சக்தி இருக்காது. அவர்கள் அரைக்கீரையைக் கடைஞ்சி சாப்பிட்டால் நல்ல பலம் கிடைப்பதுடன் குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும்.

முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தா‌ய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ‌ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க. முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா‌ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும்.

இந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ‌ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ‌ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும். முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும்.

பிறகு சூடு ஆறுறதுக்கு‌ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா‌ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம். கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.

வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவேளைக்கீரையை நெ‌ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.

தூதுவேளை கீரையை கஷாயமா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா‌ய்ச்சல் குணமாகும். டைபா‌ய்டு, நிமோனியா மாதிரி கா‌ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும் என்கிறார் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன்

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!



சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

மஞ்சள்


மங்களகரமானது மட்டுமில்ல... சிறப்பான மருந்து, கிருமிநாசினி என பல பெருமைகளைக் கொண்டது.
பெண்கள் முகத்துல மஞ்சள் பூசினா... வீடே மங்களகரமா இருக்கறது மட்டுமில்ல, அவங்களோட உடல்நிலையும் நல்லா இருக்கும்.
பொதுவாவே, மஞ்சளை நெருப்புல சுட்டோ... இல்ல, நல்லெண்ணெயில முக்கி நெருப்புல சுட்டோ... புகையை சுவாசிச்சா... மூக்கடைப்பு தொடங்கி, தலைவலி, ஜலதோஷம், தும்மல் எல்லாம் சட்டுனு நின்னுரும்.
ஐம்பது மில்லி பால்ல அதே அளவு தண்ணியை சேர்த்து, உறிச்ச வெள்ளைப்பூண்டு 10 பல் போட்டு, நல்லா வேக வைக்கணும். பூண்டு வெந்து, பால் பாதியா வத்தினதும்... மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கல்கண்டு சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தால கடைஞ்சி குடிச்சா... நெஞ்சுச்சளி, மூக்குல தண்ணி கொட்டுறதுனு சளித்தொல்லை எல்லாம் சரியாகும்.
சிலருக்கு வயித்துப்போக்கு வந்து பாடாபடுத்தும். இப்போ நான் சொல்லப் போற வைத்தியத்தை அந்த மாதிரி நேரங்கள்ல பயன்படுத்தினா, சட்டுனு குணம் கிடைக்கும். அங்குல அளவுக்கு மஞ்சளை எடுத்து, சின்னச் சின்ன துண்டா நறுக்கி, பாத்திரத்துல போட்டு, மஞ்சள்ல தீப்பொறி பறக்கற அளவுக்கு வறுக்கணும். அதுல ஒரு ஸ்பூன் ஓமத்தைப் போட்டு, அது வெடிக்கற நேரத்துல மூணு வெத்தலையை பிய்ச்சுப் போடணும். பிறகு, ஒரு டம்ளர் தண்ணிய ஊத்தி கொதிக்க வைக்கணும். வடிகட்டின அந்த நீரை குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும், பெரியவங்களுக்கு கால் டம்ளரும் கொடுத்தா... வயித்துப்போக்கு சரியாகும்.
புண் வந்தா மஞ்சள்பொடியை அதுமேல தூவி, அப்பப்போ சுத்தம் பண்ணிட்டு வந்தா... புண் சரியாகிரும்.
மஞ்சளையும், சந்தனத்தையும் சம அளவு எடுத்து இழைச்சு, உடம்புல பூசிட்டு வந்தா வேர்க்குரு, உடம்புல வர்ற எரிச்சல் எல்லாம் சரியாயிரும். சிலருக்கு பொன்னுக்கு வீங்கினு ஒரு வகை அம்மைநோய் வரும். இதை புட்டாளம்மைனும் சொல்வாங்க. இது பொதுவா சின்னப் பசங்களுக்கு வரக்கூடிய ஒரு நோய். கழுத்து, கன்னம், காதை ஒட்டின இடத்துல வரும். இந்த மாதிரி பிரச்னைகளுக்கு மஞ்சளையும், வேப்பிலையையும் அரைச்சி, தினமும் ஒருவேளைனு மூணு நாளைக்கு பூசிட்டு வந்தா... பொன்னுக்கு வீங்கி சரியாயிரும்.

Thursday, November 14, 2013

இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

யோகா பற்றிய வரலாறு.

இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.


மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,

நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.

இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :

யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.

பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :

• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.

• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.

• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :

இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.

யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க,இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும்.